குழந்தை நரபலி? ஏரிக்கரையில் புதைக்கப்பட்ட மூட்டை…!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வன்னியந்தாங்கல் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் நேற்று மாலை மர்ம சம்பவம் ஒன்று கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென மண் வெட்டியால் பள்ளம் தோண்டி ஏதோ ஒன்றை புதைத்துள்ளார். இதை அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வாலிபர் கவனித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த வாலிபர் அந்த நபரிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் எந்த பதிலும் கூறாமல் பைக்கில் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்களிடம் தகவல் பரவ, குழந்தை கொலை அல்லது நரபலி தொடர்பான சடலம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்தி கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்தனர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கிராம மக்களின் உதவியுடன் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, ஒரு மூட்டை கிடைத்தது. அதை திறந்து பார்த்ததில் நாயின் சடலம் இருப்பது தெரியவந்தது. வளர்ப்பு நாய் இறந்ததால், அதன் உரிமையாளர் அமைதியாக புதைத்துவிட்டு சென்ற சம்பவம் என உறுதியானது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
