லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி... 50 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!
ஹைதராபாத் அருகே மீர்பேட்டை பகுதியில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குச் சென்ற மாணவர் ஒருவர் டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஐடிஐ முதலாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவர், வழக்கம்போல இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். மீர்பேட்டை சாலையைக் கடந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு ஆட்டோ திடீரென அவரது பைக் குறுக்கே வந்துள்ளது. அந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க, மாணவர் தனது பைக்கை வலதுபுறமாகத் திருப்பியுள்ளார்.

அப்போது அவருக்குப் பின்னால் வந்த டிப்பர் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவர் மீது மோதியது. லாரியின் சக்கரத்தில் சிக்கிய மாணவரை, சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு லாரி இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் உடல் நசுங்கி அந்த இளைஞர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீர்பேட்டை காவல்துறையினர், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், திடீரென குறுக்கே வந்த ஆட்டோவால் நிலைதடுமாறியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரிக்குச் சென்ற மாணவர் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
