திருமணமான 18 நாட்களில் கொடுமை... தாலியைக் கழற்றி வைத்துவிட்டு எஸ்கேப்பான புதுமணப்பெண்!
குமரி மாவட்டம் குளச்சல் அருகே திருமணமான வெறும் 18 நாட்களில் புதுப்பெண் ஒருவர் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டுச் சென்ற அந்தப் பெண், தனது கணவருக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான குறுந்தகவலை (Voice Message) அனுப்பியுள்ளார். அதில், "விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். உங்களைத் தேட வேண்டாம், நான் வரமாட்டேன்" என்று தெரிவித்திருப்பது, கணவரைச் செய்வதறியாது திகைக்க வைத்துள்ளது.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன்சேரி விளையைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பிறகு, மணமக்கள் இருவரும் வழக்கம்போல் உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்குச் சென்றுள்ளனர். திருமண பந்தம் இனிதே தொடங்கிய நிலையில், திருமணமாகி 18வது நாளான கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாலை நேரத்தில் அந்தப் புதுப்பெண் திடீரென வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.
வீட்டிற்கு வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய வாலிபரின் தாயார், மருமகளை வீட்டில் காணாமல் பயந்து போனார். உடனடியாக இந்த விவரத்தை மருமகனின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்து, அவரை வீட்டிற்கு வரவழைத்தார். மனைவியைக் காணவில்லை என்ற செய்தியால் அதிர்ச்சி அடைந்த கணவரும் தாயாரும் சேர்ந்து, பல இடங்களில் தேடினர். ஆனால், புதுப்பெண் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதே சமயத்தில், வீட்டில் தேடிப் பார்த்தபோது, அந்தப் பெண் அணிந்திருந்த தாலி செயின் மட்டும் வீட்டில் தனியாகக் கிடந்துள்ளது. இதனால், தாலியைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் அந்தப் பெண் வீட்டை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் நினைத்தனர். இந்தத் தேடுதல் மற்றும் பரபரப்பான சூழ்நிலையில், கணவரின் செல்போனுக்கு அவருடைய மனைவி வாட்ஸ்-அப் மூலமாக ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்பி உள்ளார்.

அந்தக் குறுந்தகவலில், "எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை யாரும் தேட வேண்டாம், நான் இனிமேல் வரமாட்டேன். தாலியைக்கூட வேண்டாம் என்று கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்களுடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை ப்ளீஸ்" என்று உருக்கமான குரலில் அனுப்பி உள்ளார்.
திருமணமான சில நாட்களிலேயே, அதுவும் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்திக் கட்டிய திருமணம் என்று மனைவி குறுந்தகவல் அனுப்பியதால், அதிர்ச்சி அடைந்த கணவர் செய்வதறியாது திகைத்துப்போனார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். திருமணமாகி 18 நாட்களில் புதுப்பெண் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு மாயமான சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
