இந்தூரில் அசுத்த நீரால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு - நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி!
இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் பெற்ற இந்தூரில், கடந்த சில வாரங்களாக நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசுத்தமான குடிநீரை அருந்தியதால் பரவிய காலரா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு (Diarrhea) பாதிப்பால் பலி எண்ணிக்கை தற்போது 30 ஆக அதிகரித்துள்ளது. இந்தூர் அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 3 நோயாளிகள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அவருக்கு வென்டிலேட்டர் (Ventilator) மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனப் புகார்கள் எழுந்த நிலையில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளை தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறியவும், அதிகாரிகளின் தவறு குறித்து விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் ஒரு உயர்மட்ட விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
நிர்வாகத்திற்கு கண்டனம்: தூய்மையான நகரம் எனப் பெயர் பெற்ற ஒரு இடத்தில், குடிநீர் குழாய்களுடன் கழிவுநீர் கலந்தது எப்படி? இதைத் தடுக்க அதிகாரிகள் ஏன் தவறிவிட்டனர்? என நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட்டு வருகிறது.

பழைய மற்றும் சேதமடைந்த குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கசிவு ஏற்படுவதைக் கண்டறியத் தொழில்நுட்பக் குழுவினர் வீடு வீடாக ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட வார்டுகளில் 24 மணி நேர மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் குளோரின் கலக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான சில மாநகராட்சிப் பொறியாளர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தூரில் நடந்த இந்தத் துயரம், நகர்ப்புறக் கட்டமைப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் உள்ள ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
