மதுரையில் இரட்டைக்கொலை.. 2 இளைஞர்கள் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை!
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இரண்டு இளைஞர்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தேத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கடுகுமுனியசாமி (23) மற்றும் அவரது நண்பர் மோகன் (25) ஆகிய இருவரும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடுரோட்டில் ஓட ஓட கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பட்டணம் கிராமத்தின் வழியாக அவர்கள் இருவரும் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துத் தாக்குதலில் ஈடுபட்டது.

உயிருக்கு பயந்து ஓடிய இருவரையும் விடாமல் துரத்திய அந்தக் கும்பல், சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு மின்னல் வேகத்தில் காரில் தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஒத்தக்கடை போலீசார், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பட்டணம் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலே இந்த இரட்டைக்கொலைக்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய காரின் அடையாளங்களைச் சேகரித்து வருகின்றனர். மீண்டும் மோதல் வெடிக்காமல் இருக்கப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
