ரூ30 லட்சம் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய இளம்பெண்... கல்லூரி படிப்பை பாதியில் விட்டு காதலனுடன் அட்ராசிட்டி!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியில் அரங்கேறியுள்ள போதைப்பொருள் கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் ஏலப்பாரா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரிசானா பாத்திமா, கோதமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இடையில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய அவர், தனது நண்பரான ஏரமல்லூர் பகுதியைச் சேர்ந்த அனந்து பிரசாத் (24) என்பவருடன் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இருவரும் பெங்களூருவில் இருந்து 'எம்.டி.எம்.ஏ' (MDMA) என்ற உயர்தர ரசாயனப் போதைப்பொருளைக் கடத்தி வந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மிகவும் தந்திரமாகத் தங்களின் அடையாளத்தை மறைத்து, தினமும் 3,000 ரூபாய் வாடகை கொண்ட சொகுசு ஹோட்டல் அறைகளில் தங்கி வந்துள்ளனர். இவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்துக் கலால் துறை அதிகாரி பிரமோத் தலைமையிலான குழுவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையை அதிரடியாகச் சுற்றி வளைத்த அதிகாரிகள், அங்குப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 37 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் பயன்படுத்திய மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில், இந்த ஜோடி நீண்ட நாட்களாகக் காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கல்லூரி மாணவர்களையே குறிவைத்து இவர்கள் 'சரக்கை' விற்பனை செய்துள்ளனர். பிடிபட்ட ரிசானா பாத்திமா மற்றும் அனந்து பிரசாத் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள கலால் துறையினர், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் பெரிய நெட்வொர்க் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்பைக் கைவிட்டுப் பாதாள உலகிற்குள் நுழைந்த இந்த இளம் ஜோடியின் செயல், கேரளாவில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
