தாலி கயிற்றின் மஞ்சள் வாசம் கூட போகலையே... புதுப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. அடித்தே கொன்ற கணவன்... சென்னையில் பரபரப்பு!
தாலி கயிற்றின் மஞ்ச வாசம் கூட போகலையே... பாவி எங்க பொண்ண அடிச்சே கொன்னுட்டான் என்று கதறுகிறார்கள் லோகப்பிரியாவின் வீட்டில். கல்யாணமாகி சந்தோஷமாக புகுந்த வீட்டிற்கு வந்த பெண், தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார்கள் கோகுல கண்ணனும், அவனது தாயாரும்.
தாம்பரம் சோமங்கலத்தை அடுத்துள்ள அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன்(32). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு லோகப்பிரியா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி லோகப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகப் பிரியாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லோகப்பிரியாவின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் லோகப்பிரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் லோகப்பிரியாவின் கணவர் கோகுலகண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகப்பிரியா கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வந்தது.
கோகுல கண்ணனுக்குத் திருமணம் செய்ய அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது கோகுல கண்ணனின் வழுக்கை தலை காரணமாக அவருக்குப் பெண் கொடுக்க பலரும் முன்வரவில்லை. அதனால் கோகுலகண்ணன், தன்னுடைய வழுக்கைத் தலையை விக் மூலம் மறைத்தார்.
லோகப்பிரியாவைப் பெண் பார்க்கும் போதும் கோகுலகண்ணன், தனக்கு வழுக்கைத் தலை என்கிற உண்மையைச் சொல்லவில்லை. திருமணத்தின் போது பந்தாவாக விக்கை வைத்து லோகப் பிரியாவையும் அவரின் குடும்பத்தினரையும் கோகுல கண்ணன் ஏமாற்றி உள்ளார். கோகுல கண்ணனுக்குத் திருமணம் முடிந்து, மறுவீட்டிற்கு சென்ற போது தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மனைவி லோகப்பிரியா, எண்ணெய் தேய்க்க முயன்ற போது கோகுல கண்ணன் மறுத்திருக்கிறார்.
அப்போது கோகுலகண்ணன் வெட்கப்படுவதாக லோகப்பிரியாவும் அவரின் குடும்பத்தினரும் எண்ணி உள்ளனர். ஆனால், உண்மையை பல நாட்கள் மறைக்க முடியாது என்பது போல, கோகுலகண்ணனின் வழுக்கைத் தலையை ஒரு நாள் லோகப்பிரியா பார்த்து விட்டார். அதனால் மனமுடைந்த லோகப்பிரியா, ‘ஏன் உண்மையை மறைத்து விட்டீர்கள்?’ என்று கோகுல கண்ணனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கோகுலகண்ணன் ‘நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வரதட்சணையாக நகைகளைக் கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டீர்கள்’ என லோகப்பிரியாவிடம் சண்டை போட்டிருக்கிறார்.
மேலும், கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அதுவும் உண்மையில்லை என லோகப்பிரியாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
சம்பவத்தன்று ஆத்திரமடைந்த கோகுல கண்ணன், மனைவி லோகப்பிரியாவைத் தாக்கி உள்ளார். இதில் அவர் உயிரிழந்து விட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த கோகுலகண்ணன், லோகப்பிரியா உயிரிழந்த தகவலை தன்னுடைய அம்மா ராஜேஸ்வரியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க, லோகப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக லோகப்பிரியாவின் உடலை வீட்டில் தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆனால், லோகப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் லோகப்பிரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. இதையடுத்தே கோகுலகண்ணன், அவரின் அம்மா ராஜேஸ்வரி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!