பரபரப்பு... முன்னாள் எம்எல்ஏ ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்டு பலி!
கர்நாடக மாநிலத்தில் ஆட்டோ டிரைவரின் தாக்குதலுக்கு ஆளான கோவா மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவாவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லாவூ மாம்லெட்தார். கர்நாடகத்தின் பெல்காவி மாவட்டத்திற்கு நேற்று பிப்ரவரி 15ம் தேதி தொழில் ரீதியான பயணமாக தனது காரில் வந்துள்ளார். அப்போது, வழியில் அவரது கார் ஆட்டோ மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆட்டோ ஓட்டுநர் மாம்லெட்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது ஆட்டோவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடாக அவர் பணம் கேட்க அதற்கு மாம்லெட்தார் மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் மாம்லெட்தாரை பல முறை தாக்குவது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர், பெல்காவியில் அவர் தங்கியுள்ள விடுதி அறைக்கு சென்ற அவர் அங்குள்ள மின்தூக்கியில் ஏறியபோது மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல் துறையினர் அந்த ஆட்டோ ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவா நகர காவல் துறை உயர் அதிகாரியாக பணிபுரிந்த லாவூ மாம்லெட்தார் 2012 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 2017 ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
