ஜீவசமாதி அடைந்தவரின் உடலை தோண்டியெடுப்பது தற்காலிகமாக நிறுத்தம்!

 
கோபன் சுவாமி


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுக்கும் பணி நேற்று நடைபெற இருந்த நிலையில், அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி ( 69) என்பவரை ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி கடந்த ஜனவரி 9ம் தேதி அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவரது சமாதியைத் தோண்டி அவரது உடலை வெளியே எடுத்து உடற்கூறாய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று நெய்யதிங்கரா காவல் துறையினர் மற்றும் வருவாய் கோட்ட அதிகாரிகள் அவரது உடலை தோண்டி எடுக்கும் பணியை மேற்கொள்ள சென்றனர். அந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 

பின்னர், அவரது சமாதியை தோண்ட அதனைச் சுற்றி முதற்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபன் சாமியின் குடும்பத்தினர் அவரது சமாதியின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர், காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி அவர்களது வீட்டிற்குள் அடைத்தனர். 

ஆனால், அதற்குள் ஹிந்து ஐகிய வெடி, விடிஎஸ்பி போன்ற ஹிந்து மத அமைப்புகள் அங்கு குவிந்து, அவரது உடலைத் தோண்டுவது அவர்களது மதநம்பிக்கையை புண்படுத்தும் செயல் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே அக்கம்பக்கத்தினர் கோபன் சுவாமியின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் நடந்துக் கொண்டது மிகவும் சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறியிருந்த நிலையில் அவரது சமாதியை தோண்டி உண்மையைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், காவல் துறையினருக்கும், மத அமைப்புகளுக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது உடலைத் தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், எப்போது தோண்டப்படும் என்பது குறித்து இன்று ஜனவரி 14ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!