சென்னை ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!
சென்னை அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அலுவலகத்தின் முக்கிய கோப்புகள், கணினிகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் எரிந்து நாசமாயின. விடுமுறை தினம் என்பதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
அண்ணா நகர் 12-வது பிரதான சாலையில் உள்ள தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடத்தில், தரைத்தளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திடீரெனத் தீப்பற்றி கரும்புகை வெளியேறியது. காவலர் அளித்த தகவலின்பேரில் கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் 60 வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தரைத்தளத்தில் இருந்த யுபிஎஸ் சாதனத்திலிருந்து ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்தில் தரைத்தளத்தில் இருந்த அலுவலக மேஜைகள், நாற்காலிகள், முக்கியமான கோப்புகள், கணினி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. முதல் தளத்தில் இருந்த ஓய்வறை, உணவகம் ஆகிய பகுதிகளிலும் தீ பரவி மரச்சாமான்கள் எரிந்தன. அதிக புகை காரணமாகக் கட்டிடத்தின் தரை மற்றும் முதல் தளத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் உடைத்து, இயந்திரங்கள் மூலம் புகையை வெளியேற்றினர்.
ஜிஎஸ்டி உதவி ஆணையர் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இதேபோல், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அலுவலகக் கட்டிடத்தில் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை குழுவின் முழு அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
