இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து 335 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்கள் வேறு பகுதிக்கு நகர முயன்றபோது, மண்டபத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் படகை மட்டும் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். இதில் ஜான்தாஸ், அமோஸ்டின், பரலோக ஜெபஸ்டின் ஆன்ட்ரோஸ் ஆகிய மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான மூவரையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டதால் மண்டபம் பகுதி மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை கண்டித்து எழுந்த இந்த போராட்டத்தால், மண்டபம் கோவில்வாடி கடலோரத்தில் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
