அமெரிக்க விமானங்களுக்கு பிரான்ஸ் அனுமதி!
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த தங்களது சில ராணுவத் தளங்களை பிரான்ஸ் அரசு அனுமதித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது நடைபெறும் நடவடிக்கைகளில் அமெரிக்க விமானங்கள் ஈடுபடுவதற்காக மத்திய கிழக்கில் உள்ள சில ராணுவத் தளங்களை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள தங்களது கூட்டாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போர் சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

முன்னதாக தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பழிதீர்க்கும் நடவடிக்கையாக ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதேவேளை ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தங்களது வான்வழியை பயன்படுத்தக் கூடாது என ஸ்பெயின் அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டுக்கு வர்த்தகத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
