நாளை இறுதிசடங்குகள்... பிரம்ம குமாரி அமைப்பின் தலைவி மோகினி காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

பிரம்மா குமாரிகள் அமைப்பின் தலைவராக பணியாற்றி வந்த ராஜயோகினி தாதி ரத்தன் மோகினி, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 1:20 மணிக்கு அகமதாபாத்தில் வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜயோகினி தாதி ரத்தன் மோகினி, சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது உடல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆபுரோட்டின் சாந்திவன் பிரம்மா குமாரிகள் தலைமையகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்குகள் ஏப்ரல் 10 காலை 10 மணிக்கு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நிர்வாக தலைவியாக இருந்த தாதி ரத்தன் மோகினி, தனது வாழ்க்கையை முழுமையாக ஆன்மிக சேவைக்கும், மனித குல நல்வாழ்வுக்கும் அர்ப்பணித்தவர். பிரம்மா குமாரிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “அமரர் தாதி ரத்தன் மோகினி அக்காவின் பரிசுத்தமான ஆற்றல், அவரது அன்பும், எளிமையும் மற்றும் உயர்ந்த ஆன்மீக பார்வையும் எங்களது இதயங்களில் என்றும் உயிருடன் தொடரும்” என உருக்கமான இரங்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாதி ரத்தன் தனது சேவையின் ஆரம்பகாலத்தில் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய நாடுகளில் ஆன்மிக ஒளியை பரப்பியவர். தனது 101 ஆண்டுகள் வாழ்க்கையில் தனித்துவமான ஆன்மீக நடைமுறைகளை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதை காட்டியவர். அவரது மரணம் ஆன்மீக உலகிற்கு மறக்க முடியாத இழப்பாக கருதப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து பிரம்மா குமாரிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆன்மீக நேசிகள், தாதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!