நாடு முழுவதும் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து... 2வது நாளாகப் பயணிகள் பரிதவிப்பு!
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo)-வில் கடந்த சில நாட்களாகக் கம்ப்யூட்டர் செயலிழப்பு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக விமானச் சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 550-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் லட்சக்கணக்கானப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நேற்று முன்தினம் 200 விமானங்கள் ரத்தான நிலையில், இரண்டாவது நாளாக நேற்று 550-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏராளமான வெளிநாட்டுச் செல்லும் விமானங்களும் இதில் அடங்கும். டெல்லியில் 95, மும்பையில் 85, ஐதராபாத்தில் 70 மற்றும் பெங்களூருவில் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஏராளமான விமானங்கள் 12 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளன.

தினசரி 2300 விமான சேவைகள் அளிக்கும் இண்டிகோ நிறுவனத்தின் குறித்த நேரச் செயல்பாடுகள் (On-Time Performance) 19.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்களுக்கு ஓய்வு நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் புதிய அரசாங்க விதிகள் நடைமுறைக்கு வந்தன. புதிய விதிகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனம் திணறி வருவதே இந்தத் தொடர் ரத்து மற்றும் தாமதங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இண்டிகோ விமானச் சேவைகளின் பாதிப்பு குறித்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA) தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைக்கான காரணங்கள் மற்றும் விமானங்கள் ரத்து, தாமதத்தைக் குறைப்பதற்கான திட்டம் குறித்து இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நிறுவனம் கடந்த சில நாட்களாகச் செயல்பாட்டு இடையூறுகளைச் சந்தித்து வருகிறது என்றும், செயல்பாடுகளை இயல்பாக்குவதும், சரியான நேரத்தில் விமானங்களை மீண்டும் புறப்படுவதை உறுதி செய்வதும் உடனடியாக அடைய வேண்டிய இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் இருந்து ஐதராபாத்துக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. சோதனையில் எந்தச் சந்தேகத்திற்கிடமான பொருளும் கிடைக்காததால், இது புரளி என்பது தெரியவந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
