ஈரான், அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அழிவைத் தவிர வேறு வழியில்லை... ட்ரம்ப் மிரட்டல்!
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ராணுவத் தளங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகெரி, மற்றும் ராணுவ மத்திய தலைமையகத் தலைவர் ஜெனரல் கோலம் அலி ரஷித் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே சமயம், அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளான பெரெடூன் அப்பாசி, முகமது மெஹ்தி தெஹ்ரான்சி, அஹ்மத்ரேசா ஜொல்பாகரி, மற்றும் அப்துல் ஹமீது மினூ செஹர் உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பெரெடூன் அப்பாசி, 2010ல் நடந்த ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா அலி கோமேனி, “இஸ்ரேலின் இந்தக் குற்றச் செயல் மன்னிக்கப்படாது. குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதன் மூலம் அவர்களின் தீய எண்ணங்கள் தெளிவாகியுள்ளன. ஈரானின் ஆயுதப்படைகள் இதற்கு உரிய பதிலடி கொடுக்கும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் வலுவான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இந்தத் தாக்குதல்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், அணுசக்தி செறிவூட்டல் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்கும்படி வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். ஈரான் தங்களுக்கு எதிராக எதிர்பாராத அளவுக்கு வலுவான பதிலடியை எதிர்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் ஆபத்தான ராணுவத் தளவாடங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை திறம்பட பயன்படுத்தும் திறன் கொண்டவை எனவும் கூறியுள்ளார். சில ஈரானிய தலைவர்கள் துணிச்சலாக பேசியதாகவும், அவர்கள் வரவிருந்த ஆபத்தை உணரவில்லை எனவும் குறிப்பிட்டார். இந்நிலைமை இன்னும் மோசமடையலாம்,” என எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஈரான் உடனடியாக அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அழிவைத் தவிர வேறு வழியில்லை என மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் பதிவை பார்த்த பலரும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னால் அமெரிக்காவின் மறைமுக ஆதரவு இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
