ஈரான் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் பெயரில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி!

இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளான துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை தான் இலக்காக வைக்கப்பட்டன. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை ஈரானின் அணுசக்தி ஆயுதத் திட்டங்களைத் தடுப்பதற்காகவும், பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கான ஐக்கிய நாடுகள் தூதர் வெளியிட்ட அறிக்கையின்படி இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர், மேலும் 320க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகெரி, மற்றும் ராணுவ மத்திய தலைமையகத் தலைவர் ஜெனரல் கோலம் அலி ரஷித், புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் மனித உரிமைகள் மீறல் குறித்த விமர்சனங்களையும், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குறித்த விவாதங்களையும் தூண்டியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன.இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன் குறைந்தது 34 பேர் படுகாயம் அடைந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பான “ஐரன் டோம்” பல ஏவுகணைகளைத் தடுத்து அழித்தாலும், சில இலக்குகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று ஜூன் 14ம் தேதி அதிகாலை வரை இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இரு தரப்பும் மேலும் தாக்குதல்களைத் தொடர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. இது பிராந்தியத்தில் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது. ஈரானின் கூட்டாளிகளான ஹெஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடும் எனவும் அச்சம் எழுந்துள்ளது.என்ன நடக்கப்போகிறது என்கிற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!