உச்சநீதிமன்றத்தில் அமலுக்கு வந்தது... இனி ஜாமீன் மனுக்கள் மீது உடனடி விசாரணை; வழக்கு ஒத்திவைப்புக்குக் கடும் கட்டுப்பாடு!
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றுள்ள நிலையில், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் இன்று டிசம்பர் 1ம் தேதி முதல் மிக முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவும், நீதியை விரைவுபடுத்தவும் இந்தச் சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இனி புதிய வழக்குகளைப் பட்டியலிட, நீதிபதிகள் முன்பு வழக்கறிஞர்கள் வாய்மொழியாக முறையிட வேண்டிய அவசியம் இல்லை; அவை தானாகவே பட்டியலிடப்படும். தனிநபர் சுதந்திரம் மற்றும் ஜாமீன் தொடர்பான மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டு அதில் உள்ள குறைகள் சரிசெய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள் தானாகவே விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உடனடி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மரண தண்டனை, கட்டிட இடிப்பு நடவடிக்கை போன்ற மிக அவசரமான வழக்குகளை மட்டும் காலை 10 மணி முதல் 10:30 மணி வரை குறிப்பிடலாம். இந்த அவசர முறையீட்டைச் செய்ய மூத்த வழக்கறிஞர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, இளைய வழக்கறிஞர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கும் நோக்கத்துடன், வழக்கு ஒத்திவைப்புக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை இனி எக்காரணத்தைக் கொண்டும் ஒத்திவைக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வழக்குகளை ஒத்திவைக்க வேண்டும் என்றால், அதற்கு எதிர் தரப்பு வழக்கறிஞரின் முன் அனுமதியைப் பெற வேண்டும். ஒத்திவைப்புக் கோருவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, முந்தைய நாள் காலை 11 மணிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மருத்துவக் காரணங்கள் அல்லது இறப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டுமே வழக்கு ஒத்திவைப்புக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். வழக்கு விசாரணையில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்கவே இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
