ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர நகைகள், நில ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அவரின் நகைகள், நில ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு விதான் சௌதாவில் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன. கா்நாடக அரசின் வசமுள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கக்கோரி பெங்களூரு, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கா்நாடக அரசுக்கு வழக்குச் செலவுக் கட்டணமாக ரூ. 5 கோடியைச் செலுத்திவிட்டு ஆபரணங்களை பெற்றுக் கொள்ளலாம் என நீதிமன்றம் 2024ல் தீா்ப்பளித்தது.

அதே நேரத்தில் சொத்துகள் தங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா இருவரும் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதனால் பெங்களூரு, சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் தீபக், தீபாவின் மனுக்களை ஜனவரி 13 ம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் அனைத்து ஆபரணங்கள், நிலப் பத்திரங்கள் இவைகளை பிப்ரவரி 14, 15 ம் தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 29 ம் தேதி உத்தரவிட்டது.

இது குறித்து நீதிபதி மோகன் தனது தீா்ப்பில், 'ஆபரணங்கள் அடங்கிய இரும்பு பெட்டிகளை எடுத்துச் செல்ல தமிழக அரசு போதிய போலீஸ் பாதுகாப்புடன் வர வேண்டும். இங்கு நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை கா்நாடக அரசு செய்து கொடுக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்லும்போது, அளவிடும் மதிப்பீட்டாளா்கள் உடனிருக்க வேண்டும். முழு நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்' எனக் கூறியிருந்தார். அதன்படி, வழக்கின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், சுமார் 1,000 ஏக்கர் நில ஆவணங்கள் அனைத்தும் இன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. முறையாக நகைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
