24 வயசு தான்... சிறுநீரகக் கல் எடுக்க லேசர் சிகிச்சை ... அதீத ரத்தப்போக்கால் பலி!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றின் அஜாக்கிரதையால் 24 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிஷா ராய் என்ற அந்த இளம்பெண், கடுமையான சிறுநீரகக் கல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 'லேசர்' முறையில் கல்லை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மகளின் உயிரைக் காக்கக் குடும்பத்தினரும் அந்தப் பெரும் தொகையைச் செலுத்தியுள்ளனர்.

நேற்று லேசர் சிகிச்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் திட்டமிட்டபடி லேசர் முறையைப் பின்பற்றாமல், திடீரென அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின்போது அனிஷாவிற்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மெல்ல மெல்லச் சுயநினைவை இழந்தார். நிலைமை மோசமானதும் பதற்றமடைந்த மருத்துவமனை நிர்வாகம், மேல் சிகிச்சைக்காக அவரை லக்னோவிற்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் கூறிப் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளது. ஆனால், ஆம்புலன்ஸில் லக்னோவிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனிஷா ராய் பரிதாபமாக உயிரிழந்தார்.
"என் மனைவியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்" என அனிஷாவின் கணவர் கதறித் துடித்தது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. இதற்கிடையே, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பாகத் திரண்டு நீதிகேட்டுத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அனிஷாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிகிச்சையில் கவனக்குறைவாக இருந்த 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். லேசர் என்று சொல்லிவிட்டுத் தெரியாமல் செய்த அறுவை சிகிச்சை, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
