மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் துவங்கியது. பல மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்து, வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று காலை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-ம் நாளான இன்று முக்கிய விழாவான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர்-பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். அசைந்து வரும் தேரை காண்பதற்காக சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்துள்ளனர். பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!