இன்று மகரஜோதி தரிசனம்... சபரிமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், மகர ஜோதி தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
மகர ஜோதியை முன்னிட்டு, பாரம்பரிய வழக்கப்படி அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வந்த திருவாபரணங்கள், ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி புணர்தம் நாள் பி.என். நாராயணவர்மா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டது.

திருவாபரணங்கள் மூன்று சந்தன பேழைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு சன்னிதானம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு திரளான போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.மருத்துவக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் உடன் செல்கின்றனர். இன்று மதியம் ஊர்வலம் பம்பை கணபதி கோவிலை அடைந்து, சிறிது ஓய்வுக்குப் பிறகு மேள, தாளம் முழங்க சன்னிதானம் நோக்கி எடுத்துச் செல்லப்படும்.

மாலை 6 மணிக்கு திருவாபரணங்கள் 18-ம் படிக்குக் கீழ் ஒப்படைக்கப்பட்டு, 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். மகரஜோதி தரிசனத்துக்காக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வரும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
