வன்முறையாய் மாறிய கோபம் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் மம்தா பானர்ஜி!
பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், அவரை அருகில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மைதானத்தில் பொருட்கள் சூறையாடப்பட்ட இந்தச் சம்பவத்தை அடுத்து, நிர்வாகக் குறைபாடுகளுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
மெஸ்ஸியின் வருகையும் உற்சாக வரவேற்பும்
அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருமான லயோனல் மெஸ்ஸி, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பயணமாக வந்துள்ளார். மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இன்று அதிகாலை கொல்கத்தா நகருக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திரண்டு வந்து கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் பிரமாண்ட உருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. உலகக் கோப்பையைக் கையில் பிடித்திருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலையை, மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது ரசிகர்கள் இந்தியா மற்றும் அர்ஜென்டினா நாட்டின் கொடிகளை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

சால்ட் லேக் மைதானத்தில் குளறுபடி
மெஸ்ஸியின் வருகையையொட்டி, கொல்கத்தாவில் உள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட் லேக் மைதானத்தில் (விவேகானந்தா யுவ பாரதி கிரிங்கன்) பிரமாண்டமான ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ரூ.7 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
மைதானத்திற்கு மெஸ்ஸி வந்தபோது, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர். ஆனால், மெஸ்ஸியைச் சுற்றி ஏராளமான அதிகாரிகள் நின்றதால், அவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் மெஸ்ஸி மைதானத்தைச் சுற்றி வலம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வன்முறையாக மாறிய கோபம்
மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியாமலும், அவர் பாதியிலேயே வெளியேறியதாலும் ரசிகர்கள் மத்தியில் இருந்த கோபம் வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களைச் சூறையாடத் தொடங்கினர். அவர்கள் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து நொறுக்கியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மேற்கு வங்க அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனடியாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் (Twitter) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகக் குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள், அவரது ரசிகர்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
