அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிப் போராட்டம் நடத்தியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2020 செப்டம்பர் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊரடங்கு விதிகளை மீறியதாக அமைச்சர் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளின்கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2020-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதே போல், பால்வளத் துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து, கொரோனா காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக விருதுநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
