தாய் திட்டியதால் விபரீதம்... கல்லூரி மாணவி விஷம் குடித்துத் தற்கொலை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வீட்டில் தங்க மோதிரம் காணாமல் போனதால் தாய் திட்டிய மன உளைச்சலில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் கவுரி (17). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தங்கி இருந்தபடியே தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்த கவுரியின் கை விரலில் அணிந்திருந்த தங்க மோதிரம் நேற்று முன்தினம் காணாமல் போனது. இதையறிந்த அவரது தாய் செல்வி, மோதிரம் எங்கே என்று கேட்டு கவுரியைத் திட்டிவிட்டு, பொருட்கள் வாங்க அருகில் உள்ள வெள்ளிமலைக்குச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கவுரி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் (விஷம்) குடித்துவிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் கடைக்குச் சென்று வீடு திரும்பிய செல்வி, கவுரியைப் பார்த்துக் கேட்டபோது, அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாகக் கூறியுள்ளார். பதறிய தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுரியை மீட்டுச் சிகிச்சைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கவுரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் கல்வராயன்மலை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
