அமெரிக்க தாக்குதலில் அணு உலை மையங்கள் சேதமடைந்தன... ஈரான் ஒப்புதல்!

 
இஸ்ரேல் ஈரான்


 
ஈரான்  இஸ்ரேல் இரு நாடுகளுக்கிடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்ற நிலை நிலவியது.  இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாகவே களத்தில் இறங்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களால் ஈரான் அணு உலை மையங்கள் பெருமளவு சேதமடைந்ததாக முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஜூன் 22ம் தேதி  அமெரிக்காவின் B-2 குண்டுவீசி விமானங்கள் ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தி, ஈரானின் மூன்று முக்கிய அணு உலை மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை குறிப்பிடத்தக்க வகையில் பின்னடைவு செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினாலும், ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மைல் பாக்ஹாய், அல் ஜசீராவிடம் பேசுகையில், “எங்கள் அணு உலை மையங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன அதில் சந்தேகமில்லை,” எனக்  கூறினார்.

ஈரான் இஸ்ரேல்

இந்த அறிவிப்பு, ஈரானின் அணு உலை மையங்களின் சேதத்தின் அளவு குறித்து முரண்பட்ட மதிப்பீடுகள் எழுந்துள்ளன.  அதே சமயம், ஈரானின் அணு உலை மையங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியப் பங்கு, தாக்குதல்களுக்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.  இதனால், அணு உலை மையங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி அழிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இருப்பினும், ஃபோர்டோ மையத்தில் உள்ள சென்ட்ரிஃபியூஜ்களுக்கு (யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு பயன்படும் கருவிகள்) குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று சர்வதேச அணுசக்தி முகமை  தலைவர் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறியுள்ளார்.   இந்தத் தாக்குதல்களால் அணு உலை மையங்களுக்கு வெளியே கதிரியக்க மாசு ஏற்படவில்லை என்று ஈரானிய அதிகாரிகளும் IAEA-யும் உறுதிப்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில்

அதே சமயம், ஈரானின் அணு உலை மையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து  அமெரிக்க அதிபர்   ட்ரம்ப், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு உலை மையங்களை “முற்றிலுமாக அழித்துவிட்டன” எனக் கூறியிருந்தார்.   மேலும், இந்தத் தாக்குதல்களுக்கு முன்பு, இஸ்ரேல் ஜூன் 13, முதல் ஈரானின் அணு உலை மையங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது, இது இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால மோதலை மேலும் தீவிரமாக்கியது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இப்படி மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டன. ஜூன் 24ம் தேதி இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தம் பேசப்பட்டு தற்போது அங்கு பதற்றம் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது