உஷார்!! கிப்ட் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி!! இளம்பெண் தற்கொலை!!

 
ஆன்லைன்

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பராக்கா ரோடு முதல் தெருவில் வசித்து வருபவர் சுதாகர். இவரது மகள் அஸ்வினி (20). பியூட்டிஷியன் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 6ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அஸ்வினி தனது தாய்க்கு எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில், எனது சாவிற்கு லண்டனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசிய நபர் தான் காரணம், ஐ லவ் யூ அம்மா என்றும் உருக்கமாக எழுதி வைத்து இருந்தார். மேலும் விசாரணையில், அஸ்வினியுடன் ஒருவர் செல்போனில் அடிக்கடி பேசியது தெரிந்தது. அவர் பற்றி விசாரிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவிட்டிருந்தார்.

அஸ்வினி

அதன்பேரில், அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில், தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டெல்லியை சேர்ந்த நபர், அஸ்வினியை மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர், கடந்த 7ம் தேதி டெல்லி சென்று, நியூ டெல்லி சாயிப் பூரா பகுதியை சேர்ந்த மூசா (30) என்ற நபரை கைது செய்தனர்.

Scam

விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்பதும், டெல்லியில் தங்கி ஆன்லைன் மூலம் பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. அவரை நேற்று காலை சென்னை அழைத்து வந்து விசாரித்தபோது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. ஓட்டேரியை சேர்ந்த அஸ்வினி தற்கொலை செய்து கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம், லண்டனை சேர்ந்தவர் என்று கூறி மூசா அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து அவர் அஸ்வினிக்கு மெசேஜ் அனுப்பி, அவரை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அஸ்வினி வெளிநாட்டைச் சேர்ந்த மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் எனக் கூறி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மூசா, லண்டனில் இருந்து உங்களுக்கு விலை உயர்ந்த கிப்ட் அனுப்பி உள்ளேன், அதனை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களை சுங்கத்துறையில் இருந்து தொடர்பு கொள்வார்கள் எனக் கூறி இனணப்பை துண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரே வேறொரு எண்ணில் இருந்து அஸ்வினிக்கு போன் செய்து, சுங்கத்துறையில் இருந்து பேசுவதாகக் கூறி பணம் கட்டச் சொல்லி உள்ளார்.

அஸ்வினியும் அதை நம்பி, ₹25 ஆயிரம் பணம் கட்டி உள்ளார். அதன் பிறகு மீண்டும் ₹20 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த அஸ்வினி மன உளைச்சலில் கிப்ட் வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூசா, உங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண் என அனைத்தும் எங்களிடம் உள்ளது. சுங்கதுறை அதிகாரிகள் இன்னும் சிறிது நேரத்தில் உங்களை வந்து கைது செய்து விடுவார்கள் என மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி தனது தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘அஸ்வினி கூகுள் பே மூலம் மூசாவுக்கு பணம் அனுப்பியுள்ளார். குறிப்பிட்ட அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அது டெல்லியில் இருந்து இயக்கப்படுவதை தெரிந்தது. அங்கு சென்று, வங்கி மூலம் மூசாவை சுற்றி வளர்த்து கைது செய்து சென்னை அழைத்து வந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தோம்’’ என்றனர்.

மூசா

வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்கள் வங்கி கணக்கு தொடங்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனால் மூசா டெல்லியைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட் மூலமாக 5 வங்கிகளில் அக்கவுன்ட் துவங்கி உள்ளார். அந்த 5 வங்கி ஏடிஎம் கார்டுகளையும் மூசா வாங்கி வைத்துக்கொண்டு அவர் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் பயன்படுத்திய அக்கவுன்ட் குளுலு என்ற பெயரில் உள்ளது.

உண்மையில் இந்த குளுலு யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் அவர்களது அக்கவுன்டில் பணம் போட்டுக் கொள்ளாமல் ஏஜென்ட் மூலமாக பல அக்கவுன்ட்களை பெற்று, அதன் மூலம் பணம் பெறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகை ஏமாற்றியதும் அவர்களது ஏடிஎம் கார்டை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web