அச்சச்சோ.. உஷார்... வங்கக்கடலில் ஒரே சமயத்தில் 3 சுழற்றி... சென்னைக்கு 29ம் தேதி ‘ஆரஞ்சு’ அலர்ட்!!
வங்கக்கடலில் ஒரே சமயத்தில் மூன்று சுழற்சிகள் நிலவுவதால், புதிய புயல் ஒன்று உருவாகிறது. 'சென்யார்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், சென்னை மற்றும் நாகை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 29-ம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 25) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகும் இது மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
இந்த மூன்று சுழற்சிகளின் நிலவரத்தால், நாளை (புதன்கிழமை) வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 'சென்யார்' என்றால் அரபு மொழியில் சிங்கம் என்று அர்த்தம். தற்போதுள்ள நிலவரப்படி, இந்த புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால், வரும் 29-ந் தேதி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார். குறிப்பாக, செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (நவம்பர் 25) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், கேரள கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு வரும் 29-ந் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
