அதிர்ச்சி... பெட்ரோல் பங்க்கில் கேஷியர் அடித்துக் கொலை... லாரி டிரைவர்கள் 2 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்தவர் காளிமுத்து (47). இவருக்கு 2 மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தில் தங்கி இருந்து கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காசாளராக காளிமுத்து வேலை பார்த்து வந்தார். இதே பெட்ரோல் பங்க்கில் காளிமுத்துவின் தம்பி நாராயணனும் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்கு பொருட்கள் ஏற்ற தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(31) ஓட்டி வந்தார். தூத்துக்குடியை சேர்ந்த சரவணகுமார்(26) என்பவர் மாற்று டிரைவராக உடன் இருந்தார்.
கிட்டாம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்ததும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்த மாரிமுத்து முடிவு செய்தார். அவர் லாரியை அங்கு நிறுத்துவதற்காக திருப்ப முயன்றார். அப்போது அந்த லாரி பங்க்கில் உள்ள பெட்ரோல் போடும் பம்ப்பில் இடிப்பது போன்று வந்ததாக தெரிகிறது. இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் காசாளரான காளிமுத்து, மாரிமுத்துவை பார்த்து ஏன் இப்படி வேகமாக லாரியை ஓட்டி வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்படி மாரிமுத்துவும், சரவணகுமாரும் பெட்ரோல் பங்க்கில் இருந்து சிறிது தூரம் சென்று லாரியை நிறுத்தி ஓய்வு எடுத்தனர்.
ஆனால் இரவு 12 மணிக்கு மேல் அந்த லாரி டிரைவர்களான மாரிமுத்துவும், சரவணகுமாரும் மீண்டும் அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்துள்ளனர். அவர்கள் கையில் இரும்பு கம்பி இருந்தது. அப்போது காளிமுத்து அங்குள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காளிமுத்துவின் தம்பி நாராயணன் கழிவறைக்கு சென்று இருந்ததாக கூறப்படுகிறது.
லாரி டிரைவர்கள் மாரிமுத்து, சரவணகுமாரும் தூங்கிக்கொண்டு இருந்த காளிமுத்துவை எழுப்பினர். அவர் எழுந்ததும், ஏன் எங்களிடமே தகராறு செய்கிறாய்? இப்போது பேசு பார்க்கலாம்? என்று கூறினர். மேலும் தங்கள் கையில் இருந்த இரும்பு கம்பியால் காளிமுத்துவின் தலையில் ஓங்கி அடித்தனர். அதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் அவர்கள் அந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்ணாடி கதவை அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு கழிவறை சென்ற நாராயணன் வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் காளிமுத்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாராயணனை பார்த்ததும் காளிமுத்துவை அடித்துக்கொன்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 2 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர். அந்தப்பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் மாரிமுத்து, சரவணகுமார் ஆகியோரின் வலது கை முறிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!