கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்... அனைத்து பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு!

கனடாவில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, கவிழ்ந்து விபத்திற்குள்ளான விவகாரத்தில், அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் தலா ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உட்பட 80 பேர் பயணம் செய்தனர்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டு சென்றது. சி.ஆர்.ஜே-900 என்ற அந்த விமானம் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில், 20 பயணிகள் காயம் அடைந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற போது சி.ஆர்.ஜே-900 எல்.ஆர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஓடுபாதையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனடாவில் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்த வகையில் டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!