இன்று வேலூர் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு... தங்க கோவிலில் வழிபாடு! பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று டிசம்பர் 17 காலை வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தைத் திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் நகரம் முழுவதும், குறிப்பாகத் தங்கக்கோவிலைச் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு சிறப்புப் பாதுகாப்புப் படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டுள்ளனர். 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் அல்லது சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா என்பது குறித்துப் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் நாளை காலை 11.05 மணிக்குத் திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். பாதுகாப்பு கருதி இவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் வர உள்ளன. தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு அவர் புறப்பட்டுச் செல்கிறார். அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் - ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் சாலை மார்க்கமாகச் சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
