ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டணை !! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 2019 ல் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது குறித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது, சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் ராகுல்காந்தி "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" எனப் பேசியிருந்தார்.
இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியிருப்பதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த அவதூறு வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த தீர்ப்பிற்காக இன்று ராகுல் காந்தி காலையிலேயே சூரத்திற்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தீர்ப்பிற்கு பிறகு ராகுல்காந்தி “உண்மையே எனது மதம். எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை" என பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வரோதா,"பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. இதற்கெல்லாம் பயப்பட மாட்டான் எனது சகோதரன். உண்மையைப் பேசி வாழ்பவன், தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பான். உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவனுடனே இருக்கிறது " என பதிவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விடுத்த செய்திக்குறிப்பில் "எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒழிக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. பாஜக அல்லாத தலைவர்கள் மீது வழக்கு பதிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியுடன் எனக்கு கருத்துவேறுபாடுகள் உண்டு.
ஆனால் ஒரு அவதூறு வழக்கில் அவரைச் சிக்க வைப்பது முறையில்லை. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை" என தெரிவித்துள்ளார்.இந்த வழக்கை பொறுத்தவரை 2 வருட சிறைத் தண்டணையை சூரத் நீதிமன்றம் விதித்துள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையத் தொகையாக அறிவித்து ஜாமீனையும் வழங்கியுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க