பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியின் 4வது பெண் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா!

இன்று மாலை 4 மணிக்கு டெல்லியின் 4வது பெண் முதல்வராக பதவியேற்கிறார் ரேகா குப்தா பாதுகாப்பு பணியில் 25,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், ரேகா குப்தா இன்று முதல்வராக பதவி ஏற்கிறார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், பா.ஜனதா 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. இந்த வரலாற்று வெற்றி மூலம் பா.ஜனதா தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய, கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். டெல்லி முதல்வர் யார் என்கிற பட்டியலில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா, ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோர் உள்பட பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது. இதனிடையே பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றதால் அவர் வந்த பின்னர் புதிய முதல்வர் பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் டெல்லி மாநில தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவரான மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனிடையே புதிய அரசு பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வந்தது.
கட்சி தலைமையின் முடிவின்படி, நேற்றிரவு 7 மணிக்கு, மேலிட பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத், ஓ.பி.தங்கர் ஆகியோர் முன்னிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 48 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டெல்லி மாநில சட்டசபை கட்சி தலைவராக (முதல்வராக) ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார்.
50 வயதாகும் ரேகா குப்தா, ஷாலிமார் பார்க் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். கல்லூரி காலங்களில் இருந்தே தீவிர அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகி தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் பாஜகவில் சேர்ந்த அவர் 3 முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டு டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள ரேகா குப்தா, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஷாலிமார் பார்க் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளார். தனது முதல் வெற்றியிலேயே முதல்வராகவும் தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க ரேகா குப்தா உரிமை கோரினார்.
இந்நிலையில் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜனதா மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது. டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, புதிய முதல்-மந்திரிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இதற்காக ராம்லீலா மைதானத்தில் 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மேடையில் பிரதமர் மோடி மற்றும் பதவி ஏற்க உள்ள முதல் -மந்திரி, பிற மந்திரிகள் அமர்வார்கள். 2-வது மேடையில் மத்திய மந்திரிகள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமர்கிறார்கள். 3-வது மேடை மத குருமார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநிலத்தில் சுஷ்மா சுவராஜ் (பா.ஜனதா), ஷீலா தீட்ஷித் (காங்கிரஸ்), அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோரைத் தொடர்ந்து 4வது பெண் முதல்-மந்திரியாக தற்போது ரேகா குப்தா பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!