எகிறும் எதிர்பார்ப்பு... 12,000 வார்டுகளில் 38,994 வேட்பாளர்கள்... இன்று கேரளா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!
இன்று காலை 8 மணிக்கு கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. மொத்தம் 14 மாவட்டங்களில் உள்ள 12,000 வார்டுகளில் சுமார் 38,994 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சியினர் பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர். இன்றைய முடிவு தான், வரும் 2026ல் நடைபெற இருக்கும் கேரளச் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையில் LDF ஆட்சி நடைபெறுகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தலைமையிலான UDF செயல்படுகிறது. கேரளாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கப் பா.ஜ.க.வும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநில மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு: இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக டிச. 9ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெற்றது. 70.91% வாக்குப்பதிவானது. இரண்டாம் கட்டமாக டிச. 11ம் தேதி திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெற்றது. 76.08% வாக்குப்பதிவானது. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 12,000 வார்டுகளில் சுமார் 38,994 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 6 மாநகராட்சிகளைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உட்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 244 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிறது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் 21ம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
