27 கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் போலீசாரால் சுட்டுப்பிடிப்பு!
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவரது வீட்டில் மார்ச் 18ம் தேதி 20 சவரன் நகை திருடு போனது. இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். திருடு போனவரின் வீட்டில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தாலுக்கா நல்லியார்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது ஸ்டீபனை நேற்று இரவு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி சாலையில் அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர். இன்று காலை கைது செய்யப்பட்ட குற்றவாளி அளித்த தகவலின் பேரில் அவர் மறைத்து வைத்திருந்த பொருட்களை எடுப்பதற்காக சிதம்பரம் அருகே சித்தலப்பாடி கிராமத்தில் உள்ள ஒற்றை பனை மரத்திற்கு அருகே போலீசார் கொள்ளையன் ஸ்டீபனை அழைத்துச் சென்றனர்.

அப்போது குற்றவாளி ஸ்டீபன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாமலைநகர் தலைமை காவலர் ஞானப்பிரகாசம் என்பவரை கிழித்து விட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் ஸ்டீபனின் காலில் சுட்டார். இதில் முட்டிக்கு கீழே அவருக்கு குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதால் ஸ்டீபனையும், காயமடைந்த காவலரையும் அருகிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் ஸ்டீபன் மீது திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 25 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
