அதிர்ச்சி... சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு சென்ற கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. திருட்டு!
சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற கன்டெய்னரை உடைத்து அதில் இருந்த 111 ஏ.சி. எந்திரங்களை திருடிய 6 பேரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணலி விரைவு சாலை, எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் சபரி (35). இவர் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து 320 புதிய ஏ.சி. எந்திரங்களை இந்நிறுவனத்துக்கு சொந்தமான 4 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
பின்னர் 320 ஏ.சி. எந்திரங்கள் இருந்த அந்த கன்டெய்னர்கள், சென்னை துறைமுகத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊழியர்கள் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது 111 ஏ.சி. எந்திரங்கள் திருடுபோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அறிந்த சபரி, எண்ணூர் போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கன்டெய்னர் யார்டில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (41) மற்றும் அவரது கூட்டாளிகளான ஜானகிராமன் (45), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான நெடுமாறன் (31), இளமாறன் (32), தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த சரவணன் (34), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதயநிதி (28) ஆகிய 6 பேரும் சேர்ந்து லாரி டிரைவரான குருமூர்த்தி உதவியுடன் கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. எந்திரங்களை திருடி, விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷ் உள்பட 6 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ஏ.சி. எந்திரங்கள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் விற்பனை செய்த 15 ஏ.சி. எந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிரைவர் குருமூர்த்தி உள்பட 2 பேரை தேடி வருகிறார்கள். கைதான ராஜேஷ், இதுபோல் ஏற்கனவே பல கன்டெய்னர்களை உடைத்து திருடியது தொடர்பாக 11 வழக்குகளும், நெடுமாறன் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
