மாணவி வன்கொடுமை... தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். அதே சமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஞானசேகரன் கைதை தொடர்ந்து இந்த பாலியல் குற்ற செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி இருந்தது.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்றிருக்கும் நிலையில், எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டிருந்த மாணவியின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருந்த நிலையில், அவை வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் அப்படியே வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனைத்தொடர்ந்து பாதிகப்பட்ட மாணவியின் விவரங்களை யாரும் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்ய முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எப்.ஐஆர். நகலையோ இணையதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த கொடூரமான செயலை ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்கும்.
பாதிக்கப்பட்டவருக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை BNS, 2023 இன் பிரிவு 71ஐ எப்.ஐ.ஆரில் சேர்க்கவும். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பழைய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவர் மீது வழக்கு இருந்தும் தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களை செய்யத் தூண்டியது, இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றிய தீவிர கவலையை எழுப்புகிறது" என்றும் அதில் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீமதி. விஜய ரகத்கர் தமிழக காவல்துறைக்கு இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!