தொடரும் சோகம்... நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அகிலி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் குமார்- ஆஷா. இவரது மகள் கயல்விழி. நடப்பாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவி வழக்கம் போல் நேற்று இரவு தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.
இன்று தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் அவர் தாயார், காலை நான்கு மணிக்கு மகளை எழுப்புவதற்காக மாணவி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றிருந்தார். அப்போது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மன உளைச்சல் காரணமாக அல்லது தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!