ஒரே நாளில் அடுத்தடுத்த விபத்து... பொங்கல் சீர் கொடுத்த தந்தை பலி! பார்க்கச் சென்ற உறவினரும் உயிரிழப்பு!
பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டிய ஒரு குடும்பத்தில், அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கோர விபத்துகள் மூன்று உயிர்களைப் பறித்துள்ள சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மற்றும் காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் வசிக்கும் சன்னியாசியின் மகளுக்குப் பொங்கல் சீர்வரிசைப் பொருட்கள் வழங்குவதற்காக அவர்கள் சென்றனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சன்னியாசி மற்றும் ராமலிங்கம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை விபத்தில் சிக்கிய செய்தி கேட்டு, சன்னியாசியின் மகள் வேம்பரசி மற்றும் உறவினர்கள் அரியநாச்சியிலிருந்து ஒரு ஆட்டோவில் வேப்பூர் நோக்கி விரைந்தனர்.

முதல் விபத்து நடந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலேயே, இவர்கள் வந்த ஆட்டோ மீது மற்றொரு கார் மோதியது. இதில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த வசந்தா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
