ரூ35 முதல் புறநகர் ஏ.சி. மின்சார ரயில் கட்டணங்கள்... முழு பட்டியல்!

சென்னையின் புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் புறநகர் ரயில் சேவைகளில் ஏ.சி.சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மின்சார ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயிலின் சேவை இன்றியமையாதது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். சாதாரண மின்சார ரயிலுக்கு பதிலாக முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டன. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி பிப்ரவரியில் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், சோதனை ஓட்டம் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராமல் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியது. அதன்படி இந்த ரயில் சேவையானது சென்னை கடற்கரையில் இருந்து ரயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செங்கல்பட்டுக்கு இன்று முதல் தினமும் காலை 7 மணி மற்றும் பிற்பகல் 3.45 மணிக்கு இயக்கப்படுகிறது. மேலும் மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணி மற்றும் பிற்பகல் 5.45 மணிக்கு இயக்கப்படுகிறது.
அதேபோல இன்று முதல் தினமும் இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வரையும், நாளை மறுநாள் முதல் தினமும் காலை 5.45 மணிக்கு தாம்பரம் - சென்னை கடற்கரை வரையும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.35
கடற்கரை - மாம்பலம் இடையே ரூ.40
கடற்கரை - கிண்டி இடையே ரூ.60
கடற்கரை - தாம்பரம் இடையே ரூ.85
கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரூ.105
செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரூ.85
தாம்பரம் - எழும்பூர் இடையே ரூ.60 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!