சிவகங்கையில் மீண்டும் பதற்றம்... திமுக நிர்வாகி சராமாரியாக வெட்டிக்கொலை!

சிவகங்கை சாமியார்பட்டியில் வசித்து வருபவர் பிரவீன் குமார். 27 வயதான இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராகவும், ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் பிரவீன்குமார், சாமியார்பட்டியில் உள்ள அவரது தோப்பில் இருந்த போது டூவீலரில் வந்த ஒரு கும்பல், பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. பிரவீன்குமாரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை-மானாமதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எஸ்பி ஆசிஸ்ராவத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சந்தேகத்தின் பேரில் சாமியார்பட்டியில் வசித்து வரும் விக்கி (எ) கருணாகரன்(20), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன்(19), திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு(21) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!