பயங்கரவாத ஆதரவுக் குற்றச்சாட்டு... வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்!
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) அவர்களுக்கு ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அவர் மேற்கொண்ட நீண்ட போராட்டத்திற்காக, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மீதான பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளால், அந்தப் பரிசைப் பெறுவதற்காக நார்வே செல்வதில் அவருக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
வெனிசுலாவின் 'இரும்புப் பெண்மணி' என்று அறியப்படும் மரியா கொரினா மச்சாடோ, கடந்த 20 ஆண்டுகளாக அங்கு ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். கடந்த ஆண்டு வெனிசுலாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டன.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்ததுடன், மரியாவால் ஆதரிக்கப்பட்ட எட்முண்டோ கோன்சலசை வெற்றியாளராக அங்கீகரித்தன. இதையடுத்து நடந்த போராட்டங்களால் கோன்சலஸ் நாட்டை விட்டு வெளியேறினார். ஆனால், மரியா வெளிநாட்டுக்குத் தப்பி ஓடாமல், வெனிசுலாவுக்கு உள்ளேயே தலைமறைவாகிப் போராடி வருகிறார்.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படுவதாக அதிபர் மதுரோ மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து கரீபியன் கடற்பகுதியில் செல்லும் படகுகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு மரியா கொரினா மச்சாடோவும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
இதன் காரணமாக, வெனிசுலா அரசு மரியா மீது "வெறுப்பைத் தூண்டுதல்" மற்றும் "பயங்கரவாத ஆதரவு" உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 10ஆம் தேதி நார்வேயில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. நோபல் பரிசைப் பெறுவதன் மூலம் மதுரோ ஆட்சியில் இருந்து தனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதிய மரியா, நார்வே செல்லத் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், பயங்கரவாதக் குற்றச்சாட்டு காரணமாகத் தலைமறைவாக உள்ள மரியா, நோபல் பரிசு பெற நார்வே சென்றால், அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியவராகவே கருதப்படுவார் என்று அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதில் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
