"சங்கி கூட்டத்தால தமிழ்நாட்டைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது!" - உதயநிதி ஸ்டாலின்!
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் அரசியல் எதிர்ப்பாளர்களையும், பாஜகவையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கட்டுப்பாடற்றக் கூட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று அவர் சாடியதுடன், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு கட்டுக்கடங்காததாகவே இருக்கும் என்றும் முழக்கமிட்டார்.
கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்மையில் தமிழக அரசியலில் ஏற்பட்ட சில கூட்டங்களைக் குறிக்கும் விதமாகப் பேசினார். "வானவில் கலர் கலராக அழகாக இருக்கும். அதனைப் பார்ப்பதற்கு மக்கள் நிறைய பேர் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல, உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம்." மேலும் பெண்களுக்காகக் களம் அமைத்துக் கொடுப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் முன் நிற்பதாகவும், ஆண்களுக்கு நிகராகப் போராட்டக் களங்களிலும் பெண்கள் பங்கேற்றதால்தான் திராவிட இயக்கம் திசைகள் எங்கும் வளர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், பலம் வாய்ந்த கூட்டங்கள் ஒழுக்கம் இல்லாமல் இருந்தால் அதனால் பயன் இல்லை என்றும், அந்தக் கூட்டத்தை வைத்து யாராலும் எதுவும் சாதிக்க முடியாது என்றும் சாடினார். "பாஜக என்னும் மதவாத யானையை அடக்கும் அங்குசம்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் அ.தி.மு.க.வை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்."

சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களையும், பாஜகவினரையும் 'சங்கிகள்' என்று குறிப்பிட்ட உதயநிதி, அவர்களுக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது என்று கூறினார். "என்னை இழிவு செய்வதாக நினைத்துத் தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவுதான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்கும் பரிதாபம் மட்டுமே வருகிறது. கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டைச் சங்கிக் கூட்டத்தால் தொட்டுக் கூட பார்க்க முடியாது." கொள்கை எதிரிகளுக்குத் தன் மீது ஆத்திரம் வருவது, திராவிடக் கொள்கையினைத் தான் சரியாகப் பின்பற்றுகிறேன் என்பதற்கானச் சான்றிதழாகப் பார்ப்பதாகக் கூறிய அவர், "தமிழ்நாடு எப்பவும் டெல்லிக்கு out off control தான். மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால் கனவில் கூட நடக்காது” என்று ஆவேசமாகப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
