உருக்கமான கடிதம் சிக்கியது; வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை... போராட்டக்களமாக மாறிய ஆரணி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் - பூங்கொடி தம்பதியினரின் இளைய மகன் விஜயகுமார் (28). இவர் வேலூர் அரசு கல்லூரியில் 2018ல் பி.ஏ பொருளாதாரம் படித்து முடித்த பட்டதாரி ஆவார். பல ஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதியும், உரிய வேலை கிடைக்காததால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்கு வன்னியர் சமூகத்திற்கான 10.5% தனி இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லாததே காரணம் என அவர் கருதியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் சடலத்தைக் மீட்டபோது, அவரது கையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. தனது டைரியிலும் அவர் ஒரு குறிப்பை எழுதி வைத்துள்ளார். அதில், "வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அப்போதுதான் எங்களைப் போன்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கண்ணமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விஜயகுமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயகுமார் எழுதிய கடிதம் மற்றும் டைரியைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் இந்த மரணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் புதுப்பாளையம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலைவாய்ப்பின்மை மற்றும் இட ஒதுக்கீடு விவகாரங்கள் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இது ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
முக்கிய குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் அல்லது மன அழுத்தம் இருந்தால் தமிழக அரசின் ஹெல்ப்லைன் எண் 104 அல்லது 'சினேகா' அமைப்பின் 044-24640050 எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
