இன்று அதிகாலை திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்கியது... குவிந்த பக்தர்கள்!

இன்று கொடியெற்றத்துடன் திருவிழா துவங்க உள்ள நிலையில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி, தொடர்ந்து காலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற மார்ச் 7ம் தேதி 5ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் (சிவன் கோவில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 9ம் தேதி 7ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வருகிற 10ம் தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் வருகிறார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேருகிறார்.
11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 9ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12ம் தேதி (புதன்கிழமை) 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று விநாயகர், சுவாமி, அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரதவீதியில் வலம் வந்து நிலையம் சேர்தல் நடக்கிறது.
மறுநாள் (13ம் தேதி) 11ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 14ம் தேதி 12ம் திருவிழா அன்று மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?