அடுத்த அதிர்ச்சி... சாலை தடுப்புகளில் மதுபான விளம்பரங்கள்... பொதுமக்கள் கண்டனம்!

குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு என்கிற வாசகங்களை எல்லாம் தமிழக அரசின் காதுகளில் யாராவது பொருளோடு சொல்லிக் கொடுத்து ஓதினால் நன்றாக இருக்கும் என்று கொடைக்கானல் பகுதி மக்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வாகன கட்டுப்பாடு, இ-பாஸ் முறைகள் எல்லாம் ஓகே. ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் என்று சொல்லும் அரசு, சாலைகளின் தடுப்புகளில் மதுபான விளம்பரங்களை வைத்து, சும்மா வண்டி ஓட்டிச் செல்பவர்களைக் கூட குடிக்க அழைப்பது நியாயமா என்று புலம்புகின்றனர்.
ஏற்கெனவே இந்த பகுதிகளில் விபத்துகள் அதிகம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியைச் சுற்றி நடைபாதையில், பயணிகள் காலாற நடந்தபடி சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்து செல்வர். பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என, பல்வேறு தரப்பினர் ஏரியைச் சுற்றி நடை பயிற்சி செய்வது, வாடிக்கையான ஒன்று தான்.
மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் நடைபயிற்சி செய்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும் விதமாக, ஒருவழிப் பாதைக்காக காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பான்களில், மது போதையை ஊக்குவிக்கும், விளம்பரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இச்செயல் அனைவரின் கண்ணில் படும் வண்ணம் வைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புகளில் தனியார், விடுதி ஒன்று, இந்த விளம்பரத்தை வைத்துள்ளது, உள்ளூர்வாசிகள் காவல்துறையினர் இதுபோன்ற விளம்பரங்களை எப்படி அனுமதித்தனர் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இது குறித்து போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கம் உடனடியாக இந்த விளம்பரம் அகற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!