நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது... போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பழைய விளாங்குடி அதிமுக பகுதி செயலாளர் சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "அதிமுக சார்பில் மதுரை-திண்டுக்கல் சாலையில் விளாங்குடியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைத்தார்.
இந்நிலையில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி மறுத்து, கூடல்புதூர் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: , தற்போது கடுமையான வெயில் காலம். மக்களின் நலன் கருதி ஒரு கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல் இருப்பதால் போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் என்ன பிரச்சினை? எதற்காக நீர் மோர் பந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது? நீர் மோர் பந்தல் அமைக்க காவல் துறை விதித்துள்ள நிபந்தனைகள் வியப்பாக உள்ளன.
இரண்டு தண்ணீர் பானை வைக்கும் அளவுக்கு மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது எவ்வாறு முடியும்? இந்த உத்தரவை பிறப்பித்த காவல் துறை அதிகாரி படித்தவரா? இரண்டு பானைகள் வைக்கும் அளவுக்கு எப்படி பந்தல் அமைக்க முடியும்? இந்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கது அல்ல.
காவல் துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யாமல், தங்கள் கடமையை செய்ய வேண்டும். வெயில் காலத்தில் அனைத்து கட்சிகளும் நீர் மோர் பந்தல் அமைத்துள்ளன. ஆனால், மனுதாரர் கட்சிக்கு மட்டும் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது. எனவே, அதிமுக தரப்பில் நீர் மோர் பந்தல் அமைக்க எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!