திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக நேரம்... அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
திருச்செந்தூர் முருகன்
 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டு உள்ளதா? என அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூலை மாதம் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் ஆகமவிதிகளின்படி குறிக்கப்படவில்லை என வீரபாகுமூர்த்தி என்பவர் உள்பட சிலர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

திருச்செந்தூர்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தை வருகிற 7-ந்தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கிடையே கும்பாபிஷேக நேரம் அறிவிப்பை மறுசீராய்வு செய்ய உத்தரவிடக்கோரி, சிவராமசுப்பிரமணிய சாஸ்திரிகள், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7.7.2025 அன்று காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கு பதிலாக 7.7.2025 பகல் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், கோவில் நிர்வாகம் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு ஆடம்பர நோக்கத்துடன் தாக்கலான மனு என கருத்து தெரிவித்தார். அதுபோல இந்த சீராய்வு மனுவும் விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்றனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் வாதிடுகையில், கோவிலின் ஆகமம், மரபுகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த சுயநலமும் இல்லை என வாதாடினார். விசாரணை முடிவில், கோவில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது