அடகு நகையை திருப்புவதில் சிக்கல்... இளம்பெண் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அடகு வைத்த நகையை திருப்பித்தர கணவர் மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நீரவிமேடு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுந்தர்ராஜ் (42). தச்சு தொழிலாளி. இவரது முதல் மனைவி மாரியம்மாள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின் போது இறந்துவிட்டார். ஆனால் குழந்தையை மட்டும் டாக்டர்கள் காப்பாற்றி விட்டனர். அந்த குழந்தையுடன் 2-வதாக அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வரி (32) என்பவரை சுந்தரராஜ் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மகேஸ்வரியின் நகையை சுந்தரராஜ் அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். மேலும் அந்த நகையை அவர் திருப்பித்தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நகையை திருப்பித் தருமாறு கணவரிடம் மகேஸ்வரி கூறியுள்ளார். நகையை சுந்தரராஜ் திருப்பித்தராமல் இருந்ததால், இருவருக்கும் இடையே தினமும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் அடகுநகையை திருப்பித் தருமாறு கணவரிடம் மகேஸ்வரி கேட்டுள்ளார். இதில் 2பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சுந்தரராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாராம். இரவில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் சேலையால் மகேஸ்வரி தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகேஸ்வரி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அடகு நகையை கணவர் திருப்பித்தராத பிரச்சினையில் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!