ஓட்டுக்கு பரிசு, பணம் தர்றாங்களா?... புகார் கொடுங்க... ரகசியம் காக்கப்படும்!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் 'சி-விஜில்' என்ற நவீன செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வது அல்லது அனுமதியின்றி விளம்பரங்கள் செய்வது போன்ற விதிமீறல்களைப் பொதுமக்கள் கண்டறிந்தால், உடனடியாக இந்தச் செயலி மூலம் புகார் அளிக்கலாம். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 'கூகுள் பிளே ஸ்டோர்' அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து இந்தச் செயலியை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தச் செயலியின் சிறப்பம்சமே, புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படுவதுதான். தகவல் கொடுப்பவர் தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்றால், அதை மறைத்து வைப்பதற்கான வசதி இதில் உள்ளது எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் விதிமீறல்களில் ஈடுபடுவதைப் பார்த்தால், அதைத் தங்களது மொபைலில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் இந்தச் செயலியில் பதிவேற்றலாம். உங்களின் ஒரு 'கிளிக்' ஜனநாயகத்தைக் காக்கும் ஆயுதமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
புகார் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இந்தச் செயலியின் தனிச்சிறப்பு. நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான விவரங்கள் புகார் அளித்தவரின் அலைபேசி எண்ணிற்கு உடனடியாகக் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம் போன்ற அடிப்படை விவரங்களைப் பதிவு செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். நேர்மையான தேர்தல் நடைபெறப் பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
