போர் பதற்றம் தீவிரம்... ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!

காசாவை மையமாக கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 1½ ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 52 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் களமிறங்கினர். அதன்படி செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் செங்கடல் பகுதியை கண்காணிக்க அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது. அவர்கள் செங்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். விமான ஓடுதளம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகு இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற சூழல் இருந்தது. இந்தநிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முகாமை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள ஹூடைடா துறைமுகம், சிமெண்டு தொழிற்சாலை போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகு அறிவித்துள்ளார். எனவே இரு நாடுகளின் எல்லையில் போர்ப்பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!